பதிவு செய்த நாள்
03
ஜூன்
2025
03:06
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி பூதவாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
காரைக்கால் மாவட்ட திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது. பின் பஞ்சமூர்த்தி வீதி உலா, கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும், கடந்த 30ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, 31ம் தேதி செண்பகத்தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு உன்மத்த நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 1ம் தேதி இந்திரவிமானம், நேற்று பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும். 6ம் தேதி தேர் திருவிழா 7ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதின கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீ மத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.