பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
12:06
சென்னை; வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவ விழா கொடியேற்றம், கடந்த 31ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, வரும் 10ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கு, மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, நாக வாகன புறப்பாடு நடந்தது. நேற்று காலை மங்களகிரி விமானத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, விநாயகர், வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர், சுவாமி அம்பாள் சோமாஸ்கந்தர், மீனாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர் என, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு, யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான நாளை காலை, தேர் திருவிழா நடக்கிறது. நாளை காலை 5:00 மணி முதல் 6:20 மணிக்குள், தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு, ஒய்யாளி உத்சவம் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு, குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு, முருக பெருமான் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான 9ம் தேதி காலை 9:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உத்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, திருக்கல்யாண உத்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.