பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
02:06
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன. வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு, அதன் பின் சாத்தப்படும். இந்நிலையில் வரும் 9ம் தேதி, இக்கோவிலை கட்டிய சிதம்பர சுவாமிகளின் 366ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வரும், 9ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பின்னர் பகல் 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.