பதிவு செய்த நாள்
06
ஜூன்
2025
11:06
செங்கல்பட்டு: புலிக்குடிவனம் கிராமத்தில் கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. செங்கல்பட்டு அடுத்த புலிக்குடிவனம் கிராமத்தில், புகழ்பெற்ற கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு, 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின், 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேக விழா நடத்த, கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.
கடந்த ஓராண்டுக்கு முன் கோவில்களில் திருப்பணிகள் துவக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி மங்கள இசையுடன் கணபதி ஹோமம், கோ பூஜையுன், முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம், மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.
அதன் பின், யாக சாலையில், நான்கு கால பூஜையுடன் கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கங்கையம்மன், தண்டு மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. புலிக்குடிவனத்தைச் சுற்றியுள்ள ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் புலிக்குடிவனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.