சிறுவாபுரி முருகன் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 04:06
பொன்னேரி; திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. வைகாசி விசாக நாளான இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வரவேற்றார். கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர், மூலவர் பாலசுப்ரமணியர், உற்சவர், வள்ளி- மணவாளன், ஆதிமூலவர், பைரவர் சன்னிதிகளில் கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். கவர்னர் வருகையையொட்டி சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சின்னம்பேடு கிராமம் உள்ளிட்ட இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கவர்னர் ரவி தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வைகாசி விசாகத்தில் சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசித்த பாக்கியம் பெற்றேன். தமிழகத்தில் உள்ள என் சகோதர, சகோதரிகள், உலகம் முழுதும் உள்ள அனைவரின் நல்வாழ்வு மற்றும் நல் ஆரோக்கியத்திற்காக வேண்டிக் கொண்டேன். முருகப்பெருமான் நமக்குத் தேவையான பலத்தையும், ஞானத்தையும் அளித்து நம்மை வழி நடத்துவார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.