பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
10:06
சென்னை; வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்வத்தின் முக்கிய நாளான நேற்று, திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம், மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உத்சவம் நடந்தன. நேற்று மாலை, பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்சவம் துவங்கியது. சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. அடுத்ததாக கலச பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தன. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாலை மாற்றுதல், பாலும், பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொறியிடுதல் நிகழ்வு தீபாராதனை நடந்தது. பின், மந்திரபுஷ்பம், சதுர்வேதம், கூட்டு பிரார்த்தனை மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனின் அருளைப் பெற்றனர். முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதும் வைபவம் நடந்தது. இரவில், 750 பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. மொய் எழுதியவர்களுக்கு, சுவாமி பிரசாதமான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யசரடு, வளையல் மற்றும் இனிப்பு ஆகியவை கொண்ட மஞ்சள் பை, கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று இரவு மயில்வாகனத்தில் புறப்பாடு நடந்தது. பின், கொடி இறக்கத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது. இன்று இரவு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. நாளை முதல் வரும் 20ம் தேதி வரை விடையாற்றி உத்சவம் நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி இடம்பெறுகின்றன.