பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
12:06
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், வைகாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வரும் நிலையில், தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். அவ்வாறு வைகாசி மாத பவுர்ணமி திதி, நேற்று மதியம், 12:27 மணி முதல், இன்று, 11ம் தேதி மதியம், 1:53 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மதியம் முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். மேலும், கோவிலில், 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.