ராமேஸ்வரம் கோயிலில் இணையதள சர்வர் பழுது; இலவசமாக நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 05:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இணையதள சர்வர் தடை ஏற்பட்டதால், பக்தர்கள் இலவசமாக நீராட அனுமதிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் புனித நீராட ரூ.25 மற்றும் சிறப்பு வழியில் சுவாமி தரிசனம் செய்ய ரூ. 100, ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ரசீது இணையதளம் மூலம் ஹேண்ட் டேக் இயந்திரத்தில் வழங்கப்படுகிறது. இன்று காலை 5 மணிக்கு துவங்கிய ஸ்படிகலிங்க பூஜைக்கு பக்தர்களிடம் ரூ.50, ரூ. 200 ரூபாய் கட்டண வரிசை செல்ல ரசீது வழங்கிய போது, கோயில் இணையதள சர்வர் முடங்கியது. இதனால் பக்தர்களுக்கு ரசீது வழங்க முடியாமல் ஸ்படிகலிங்கம், கால பூஜைக்கு சென்ற பக்தர்களிடம் கோயில் ஊழியர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தை ரொக்க பணமாக வாங்கி, அதனை உண்டியலில் போட்டு அனுமதித்தனர். ஆனால் காலை 6 மணிக்கு புனித நீராட சென்ற பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், இலவசமாக நீராட கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்பின் காலை 7 மணிக்கு மீண்டும் சர்வர் சரியானதும் டிக்கெட் வழங்கப்பட்டது. தரிசனத்திற்கு பக்தரிடம் பணம் வசூலித்த நிலையில், புனித நீராட செல்லும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்களுக்கு கூலி ரூ. 12 (ஒரு நபருக்கு) கோயில் நிர்வாகம் வழங்கும். ஆனால் இன்று ஒருமணி நேரம் கட்டணம் வசூலிக்காமல் பக்தர்களை இலவசமாக அனுமதித்ததால் யாத்திரை பணியாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.