பதிவு செய்த நாள்
25
ஜூன்
2025
10:06
மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணியதில், 50 லட்சத்து, 22 ஆயிரத்து, 367 ரூபாய் இருந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று அரங்கநாதர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் இந்திரா தலைமையிலும், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி முன்னிலையிலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வாலர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 11 உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணியதில், பக்தர்கள், 50 லட்சத்து, 22 ஆயிரத்து, 367 ரூபாய் செலுத்தி இருந்தது தெரியவந்தது. மேலும், 114 கிராமம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் இருந்தது.