பதிவு செய்த நாள்
27
ஜூன்
2025
12:06
ஒடிசா; பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண கோயிலுக்கு வெளியே ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. பூரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் இன்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும். புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் வாழ்த்துத்களை தெரிவித்துள்ளனர்.
ரத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர் கூறியதாவது; "இன்று ஜெகந்நாதரைப் பார்ப்பது எனக்கு மிகவும் பாக்கியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது பக்தர்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. வருடத்திற்கு ஒரு முறை, ஜெகந்நாதர் தனது அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் அளிக்கிறார்" என்று பரவசத்துடன்கூறினார்.