சாத்துார் வெங்கடாஜலபதி கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2025 10:07
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடக்கும். இந்தாண்டு ஜூலை 2 கொடியேற்றம் செய்யப்பட்டு நாள்தோறும் சுவாமி பல்லக்கு சப்பரம் சிறிய கருட வாகனம், பெரிய கருட வாகனம் சேஷ வாகனங்களில் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. முன்னதாக பூதேவி ஸ்ரீதேவி சமேதரராய் பெருமாள் காலை 9:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். சடையம்பட்டி கிராம மக்கள் தேருக்கு தடி போட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக சுவாமி வலம் வந்து மதியம் 2:35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. சுவாமி வலம் வரும் போது பக்தர்கள் நல்ல விளைச்சல் வேண்டி பருத்தி வத்தலை சூறையிட்டும், துாப தீபம் சர்க்கரை தீபம் கற்கண்டு தீபம், துளசி மாலை, பன்னீர் தெளித்தும் வழிபட்டனர்.