துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் வழங்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 7ல் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. அன்றைய தினம், 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தயார் செய்யப்பட்ட ஒரு லட்சம் பிரசாத பைகளை, கோவில் பணியாளர்கள், பக்தர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் வழங்கி வருகின்றனர். புனித நீர் தீர்த்தம், பழனியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகை விபூதி, திருச்செந்துார் முருகன் புகைப்படம், குங்குமம், விபூதி மற்றும் ஒரு லட்டு ஆகியவை பையில் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. திருச்செந்துாரில் உள்ள, 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பிரசாத பையை கோவில் பணியாளர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகம் சார்பில், பணியாளர்கள் பிரசாத பையை வழங்கி வருகின்றனர்.