பதிவு செய்த நாள்
20
டிச
2012
11:12
அரியலூர்: சென்னிவனம் சிவன் கோவில் பாதாள அறையில், ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட விலை மதிப்பில்லாத பொருட்கள் இருப்பதாக, தொன்று, தொட்டு கூறப்படும் நிலையில், கோவில் திருப்பணி நிறைவடைவதற்கு முன்பாக, அதுபற்றி ஆய்வு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், ராயம்புரம் அருகே உள்ளது சென்னிவனம். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருங்கற்களால் ஆன, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பெருமை வாய்ந்த இவ்வூரில், ஸ்வர்ணாம்பிகை உடனமர் தீர்க்கபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, ராஜேந்திர சோழன் காலத்தில், 985 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இக்கோவிலில், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த, பல கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், இரண்டு சுற்றுச்சுவர்கள், ராஜகோபுரம், நந்தி மண்டபம், சண்டிகேஸ்வரர் சன்னதி, மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு விமானம், உள் பிரகாரம் உள்பட, சராசரி சிவன் கோயில்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் விளங்குகிறது.கடந்த, 1958ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட இக்கோவில் மண்டபம், தள வரிசை, நாயன்மார்கள் சன்னதி உள்பட, பல இடங்களிலும் சிதலமடைந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள, 18 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயை கொண்டு, திருப்பணி நடந்து வருகிறது.இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட, சென்னிவனம் சிவன் கோவிலில் உள்ள, சண்டிகேஸ்வரர் மண்டபம் மற்றும் கோடி விநாயகர் சன்னதி அருகே உள்ள உற்சவர் மண்டபம் ஆகிய இடங்களில், பாதாள அறை உள்ளதாக, தொன்று தொட்டு அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கை நிலவி வருகிறது.300 ஆண்டுகளுக்கு முன்பு படையெடுப்பு நடத்தி, அரியலூர் ஜமீன் அரண்மனையை தகர்த்து தரை மட்டமாக்கிய, சந்தா சாகிப்புக்கு பயந்து, ஐம்பொன் சிலைகள் மற்றும் விலை மதிப்பில்லாத பொருட்களை, அப்போது வாழ்ந்த பொதுமக்கள், மேற்கண்ட பாதாள அறைகளில் பாதுகாத்து வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சென்னிவனம் சிவன் கோவில் திருப்பணி நடக்கும் இவ்வேளையில், கோவில் வளாகத்தில் பாதாள அறை உள்ளதாக கூறப்படும் இடத்தை தோண்டி ஆய்வு செய்ய, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.