இறந்த தங்களது முன்னோர்களின் நினைவாக ஆடி அமாவாசை, மற்றும் தை அமாவாசை போன்ற புனித நாட்களில் ஆறு. நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, பலி தர்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, முன்னோர்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை தினமான இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே குவிந்த லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் 16 கால் மண்டப கடற்கரை பகுதிகளில் அமர்ந்திருக்கும் வேத விற்பணர்களிடம், முன்னோர்களின் நினைவாக எள், அரிசி, பூ போன்றவைகளால் தர்பணம் செய்து அவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்தபடி கடலின் கிழக்கு திசைநோக்கி நின்று புனித நீராடி தர்பணம் செய்தனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பகவதியம்மன் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கோயிலில் வழக்கமாக நடைபெறும் விஸ்வரூபதரிசனம், நிர்மால்யபூஜை, அபிஷேகம், தீபாராதனை, நைவேத்ய பூஜை, உஷபூஜை உள்ளிட்டு பூஜைகளை முடித்து 5 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.