சித்தாமூர்; மாரிபுத்துார் செல்லி அம்மன் கோவில் ஆடி தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தின் ஏரிக்கரையில், பிரசித்தி பெற்ற பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் வாரம், தேர் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா, ஆடி மாதம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் நடந்தது. பின், நேற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லியம்மன், திருத்தேரில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில், மாரிபுத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று தேர் இழுத்தனர். மேலும், பக்தர்கள் மொட்டை அடித்தும், ஊரணி பொங்கல் வைத்தும், நுாற்றுக்கணக்கான சேவல் மற்றும் ஆட்டுக்கிடாக்கள் பலி கொடுத்தும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தேர் திருவிழாவிற்காக, மதுராந்தகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலை 8:30 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் 2:00 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு ஆராதனையும் நடைபெற உள்ளன.