ஊட்டி; ஊட்டி அருகே ஏக்குணி கிராமத்தில், குலதெய்வம் ஹிரியோடைய்யா திருவிழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், விரதம் இருந்த, 12 கிராம பக்தர்கள் கோவிலில் இருந்து, வனப்பகுதியில் அமைந்துள்ள பனகுடிக்கு (வனகோவில்) சங்கொலி எழுப்பி, ஊர்வலமாக சென்று, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடை திறக்கப்படும் பனகுடியில், நெய்தீபம் ஏற்றி, முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசு மாட்டின் பால், கொம்பு தேன் மற்றும் தும்பையை வைத்து, ஐய்யனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கலாச்சார உடையுடன், பக்தர்கள் காணிக்கை செலுத்தி, ஐய்யனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததை அடுத்து, பக்தர்கள் பனகுடியில் இருந்து, சங்கொலி எழுப்பி மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். விழாவில், முக்கிய அம்சமாக நேற்று மதியம் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஹக்க பக்க கோவிலில் ஹரிக்கட்டு அறுவடை திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காணிக்கை செலுத்தி ஐய்யனை வழிப்பட்டனர்.