பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் தயார்; கொண்டாட்டத்துக்கு ஆயத்தம்
பதிவு செய்த நாள்
20
ஆக 2025 02:08
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட, விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. ஹிந்து பண்டிகைகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தற்போது, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில், காகித கூழ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. சிவன், விநாயகர், ஆஞ்சநேயர் வாகனத்தில் விநாயக பெருமான் உள்பட பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று கோவில், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடுகளுக்கு பின், ஊர்வலமாக கொண்டு சென்று, ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்ய ஹிந்து அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு சிலைகள் குறைவாக கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: மூன்றரை அடி முதல், ஐந்து அடி வரை, பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிலைகள், உயரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அனுமதி கிடைக்காதது போன்ற காரணங்களினால் சிலைகள் விற்பனை குறைந்தது. மொத்தம், 180 சிலைகள் கொண்டு வரப்பட்டடன. அதில், ஆர்டர் செய்தவர்களே அனுமதி இல்லை என சிலைகள் வாங்கவில்லை. நடப்பாண்டு, பொள்ளாச்சி பகுதியில் தொடர் மழை காரணமாக விழுப்புரத்திலேயே சிலைகள் தயாரித்து கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டு விற்பனை குறைந்ததால் நடப்பாண்டு, 60 – 70 சிலைகள் மட்டுமே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினர்.
|