திருப்பரங்குன்றம்; மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கேற்ப சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், 3 இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்களை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டில் தயாரிக்கின்றனர். நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ரூ.50 முதல் விற்கப்படுகின்றன. ராமலிங்கம் கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நவராத்திக்காக இந்தாண்டு புதிதாக அஷ்ட பைரவர்கள், அஷ்ட வராஹி, நவதுர்க்கை மூன்று இஞ்ச் முதல் ஒரு அடி உயரம்வரை களி மண்ணிலும், முருகன் மற்றும் அனைத்து அம்மன் சிலைகள் நான்கரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரித்துள்ளோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழால் மட்டுமே தயாரிக்கிறோம். வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரித்து கொடுக்கிறோம். கோயில்கள், காதி விற்பனையகங்களில் இங்கு தயாராகும் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளி மாநிலத்தினரின் ஆர்டரின் பேரிலும் தயாரித்து கொடுக்கிறோம் என்றார்.