பதிவு செய்த நாள்
26
டிச
2012
10:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மார்கழி கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாளை ஒட்டி, மலைக்கோவிலில், ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை திருவிழா அன்று, ஆயிரக்கணக்கானோர் வந்து முருகனை தரிசிப்பர். நேற்று, மார்கழி கிருத்திகை மற்றும் அரசு விடுமுறையை ஒட்டி, அதிகாலை, 4:30 மணி முதல், பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வரத் துவங்கினர். மேலும், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர். காலை முதல், இரவு, 9:00 மணி வரை மலைக் கோவிலில், ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் பக்தர்கள், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். மேலும், பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக, 25, 50 மற்றும் 100 ரூபாய் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விழாவை முன்னிட்டு அதிகாலை, 5:00 மணி மற்றும் மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவைகளால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க வேல், பச்சை மாணிக்கம், மரகத கல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.