பதிவு செய்த நாள்
26
டிச
2012
12:12
உத்தரகோச மங்கை: இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை அமைந்ததுள்ளது. எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். இக்கோவிலில் நடராசர் சன்னதி மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களையப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 10.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கு படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள். பின் பெட்டியில் வைப்பார்கள். உத்திரகோச மங்கை தலம் ராமநாதபுரம் அருகேயுள்ளது.
கோவைத் திருவாதிரை: இந்நாளின் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புதுமாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர். பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.
கேரளத் திருவாதிரை: மணமான புதுப் பெண்கள் பூத்திருவாதிரை என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கணும் என்பர்.
நடராசர் சந்திப்பு வைபவம்: சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, வெவ்வேறு நான்கு கோவில்களிலிருந்து வரும். நான்கு நடராசர் திருவடிவங்கள் சாலை ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கவைப்பர். பக்தர்கள் கூடி ஆராதனை செய்வர். இவ்வைபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைபெறுகின்றது. அந்த நான்கு கோவில் நடராசர்கள்; ஏகாம்பரேஸ்வரர் நடராசர், அருணாசலேஸ்வரர் கோவில் நடராசர், குமரக் கோட்ட நடராசர்(சிவசுப்ரமணியர் ஆலயம்) காசிவிஸ்வநாதர் ஆலய நடராசர்(இவர் நால்வரில் மிகப் பெரிய வடிவினர்). வியாதிபாத யோகம் வரும் நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத யோகத்தன்று நடராசர் திருக்கோலம் காண்போருக்கு வாழ்வில் சுபப்பலன்கள் யாவும் கிட்டும்; வேண்டியவற்றைப் பெறுவர்.
காரைக்கால் அம்மையார்: இவர் தலையைக் கீழ் ஊன்றி சரீரத்துடன் கயிலாயம் சென்று இறைவனை வணங்கினார். என் அம்மை வருகிறாள் என்றார் ஈசன். பின் திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார். இதே நடனத்தை திருவாலங்காடு தலத்தில் திருவாதிரை அன்று ஆடிக் காட்டுமாறு அம்மை வேண்ட, அப்படியே அங்கு சென்று நடனமாடி நடராசர் என்ற திருப்பெயரைப் பெற்றார் சிவன்.
ராஜாவாக ஆதி கும்பேஸ்வரர்: மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம், சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அன்று அனைத்து சிவாயலங்களிலும் நடராஜ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இந்நாளில் திருவாதிரைக்களி அல்லது வேக வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை நிவேதனம் செய்து வழிபடுவர். கும்பகோணத்தில், மார்கழி மாத ஆரூத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும். பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.