திருச்செந்துார் அருகிலுள்ள குமட்டிக்கோட்டைக்கு சொற்பொழிவுக்கு வந்தார் வாரியார். பக்தர் ஒருவரின் வீட்டில் தங்கிய அவருக்கு, சாப்பிட ஆப்பிள் கொடுத்தனர். தோல் எடுத்து சாப்பிட விரும்பியதால் தன் உதவியாளரிடம், “இதிலுள்ள தோலை எடுத்துக் கொடுப்பா” என்றார் வாரியார். சிறிது நேரத்தில் பொட்டலமாகக் கொடுத்தார். ‘தோல் நீக்கிய ஆப்பிளை துண்டுகளாக்கி தருகிறார் போலும்! ஊருக்குப் போகும் வழியில் சாப்பிடலாம்’ என நினைத்துக் கொண்டார். செல்லும் வழியில் பிரித்த போது பொட்டலத்தில் சீவிய தோல் மட்டும் இருந்தது. “என்னப்பா இது” எனக் கேட்ட போது, “தோல் எடுத்து தரச் சொன்னீர்கள். அதை சரியாகத் தானே செய்திருக்கிறேன்” என பதிலளித்தார். அவரது புத்திக்கூர்மையை எண்ணிய வாரியார் சிரித்தபடி ஏதும் பேசவில்லை.