பதிவு செய்த நாள்
28
டிச
2012
04:12
குடும்ப உறுப்பினர்களிடம் பாசமுள்ள தனுசு ராசி அன்பர்களே!
புத்தாண்டில் உங்கள் ராசியில் ராகு, சனி பகவான் ஆதாய ஸ்தானத்தில் அமர்ந்து வருடம் முழுவதும் அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர். கேது, குரு
சுபமான இடங்களில் இல்லை. இருந்தாலும் மே 28ல், குரு மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம். இதனால் உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான நன்மைகள் கிடைக்கும். சனி, ராகுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நல்ல சிந்தனைகளை துணிச்சலுடன் செயல்படுத்துவீர்கள். விவேகமுடன் பேசி நண்பர், உறவினர்களிடம் நற்பெயர், பாராட்டு பெறுவீர்கள். சமூகப்பணியிலும் உங்களுக்கு ஈடுபாடு வளரும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர்.
புத்திரர்கள் தங்கள் மனதில் ஏராளமான விருப்பங்களைவளர்த்துக்கொண்டு நிறைவேற்றித்தர பிடிவாதம் செய்வர். அவர்களை இதமுடன் கண்டித்து வழிநடத்துவது நற்பலன் பெற உதவும். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தை முழு அளவில் பெற நம்பகமானவர்களை பணி, குடியமர்த்துவது நல்லது. இஷ்ட, குலதெய்வ வழிபாடு நிறைவேறும். ஆனால், அதிக பணம் செலவாகும். இதுவரை கஷ்டம் தந்த எதிரிகளுக்கு கஷ்டமான காலம் வரும். இந்த சமயத்தில் அவர்களை பழிவாங்கலாமா என்ற எண்ணம் ஏற்படும். இருப்பினும், அவர்களை தெய்வத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விடுங்கள். அவர்களைக் கவனிக்கும் நேரத்தில், உங்கள் சொந்தப்பணிகளைக் கவனித்தால் லாபமாவது கிடைக்கும். அதிக அளவில் பணி செய்வதின் காரணமாக, உடல்நிலை சற்று பலவீனமாகும். ஆனால், மே 28ல் குருபெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியம் பெறுவீர்கள். கடனில் பெரும்பகுதியை செலுத்த தாராள பணவரவு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பத்தை மகிழ்ச்சிகரமாக்குவர். ஆயுள் ஸ்தானத்தை ஆயுள்காரகன் சனிபகவான் பத்தாம் பார்வையாக பார்ப்பதால் விபத்து, கண்டம் அணுகாத சுமூக வாழ்வியல் நடைமுறை உருவாகும். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு தேவையான உதவி வழங்கி, தங்கள் பொறுப்பை நிறைவேற்றிய பெருமிதம் கொள்வர். தொழில் சார்ந்த வகையில், தேவையான அபிவிருத்தி பணிகளை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு முயற்சி கைகூடும். வருட பிற்பகுதியில் திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். பொருள்களின் தரம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். அபிவிருத்திப்பணிகளை தாராள செலவில் மேற்கொள்வீர்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். நிர்வாகச் செலவுக்கு தாராள பணம் ஒதுக்கீடு செய்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நிர்வாக நடைமுறைகளில் இணக்கம் நிறைந்த மனதுடன் செயல்படுவர். குரு பெயர்ச்சிக்குப்பின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். லாபத்தைக் குறைத்து விற்பனை இலக்கில் உயர்ந்த இடத்தை பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைத்து கூடுதல் மூலதன தேவைகளுக்கு பயன்படுத்துவீர்கள். திட்டமிட்டபடி வீடு, சரக்கு வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. சிலர் கிளை நிறுவனம் துவங்கி சிறப்பாக நடத்திடுவர். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் திறமையுடன் பணி செய்து வேலையை சிறப்பாக நிறைவேற்றுவர். சலுகைகள் ஓரளவு பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். சக பணியாளர்கள், தொழில்நுட்ப நடைமுறைகளில் புதிய விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் உங்கள் திறமை கூடும். சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப்பின் அனுகூல நிலை உருவாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தொழில்நுட்ப அறிவில் சிறந்து திறமையை வளர்த்துக் கொள்வர். திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சலுகைகள் கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். வீடு, நவீன பொருட்கள் வாங்க அலுவலகத்தில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் எண்ணங்களுக்கு உரிய மரியாதை தருவர். முக்கிய தேவைகள் நிறைவேறி குதூகல வாழ்வு உருவாகும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை வளர்ச்சிபெற சில மாற்றங்களை உருவாக்குவர். முயற்சிகள் நிறைவேறி அதிக பணவரவைத் தரும். சிலர் கூட்டுத்தொழிலில் பங்கு சேருவர்.
மாணவர்கள்: படிப்பில் இருந்த கவனச்சிதறல் விலகி ஞாபகத்திறன் வளரும். சக மாணவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி சுமூக நட்புறவு ஏற்படும். படிப்பை முடித்து வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் இனிய அணுகுமுறை பின்பற்றுவீர்கள். மனதில் நம்பிக்கையும் செயல்களில் கூடுதல் திறமையும் வளரும். எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.
விவசாயிகள்: புதிய தொழில்நுட்ப வசதிளை பயன்படுத்துவீர்கள். மகசூல் செழித்து சந்தையில் கூடுதல் உபரி பணவரவு கிடைக்கும்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் ஆதாய நற்பலன் எளிதாக கிடைக்கும்.
பரிகாரப் பாடல்:
கற்றவர் விழுங்கும் கற்பகக்கனியை
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிர என்கண்கள் குளிர்ந்தனவே!
ஜனவரி: தொடங்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபத்தில் சனிராகு இருப்பது சிறப்பு. உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். வம்பு, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பிப்ரவரி: ஆண்டு கிரகங்களோடு மாதகிரகங்களும் அனுகூலம் தரும் விதத்தில் சஞ்சரிக்கின்றனர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் கவுரவம் கூடும். நல்ல மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனில் பெருமளவு அடைபடும்.
மார்ச்: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு செய்ய நேரிடும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் உருவாகும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்கில்ஈடுபடாமல் படிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு சோதனை காலம்.
ஏப்ரல்: குழந்தைகளின் செயல்பாடு கண்டு வருத்தப்பட நேரிடும். உஷ்ணவியாதிகள் தலைதூக்கும். தன்னம்பிக்கை குறைவதால் மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். நண்பர், உறவினர்கள் உங்களை விட்டு விலக முயற்சிப்பர்.
மே: ஆறாமிட குருவால் எதிரிகளால் தொல்லை உண்டாகும். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும். வெளியூர்ப் பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நடத்துவதில் தடை பல உண்டாகும்.
ஜூன்: குரு பெயர்ச்சியால் விசேஷ நன்மைகள் உருவாகும். குழந்தைப் பேறு வாய்க்கும். புதிய வீடு கட்டும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும்.
ஜூலை: குரு,சனி, ராகு பலத்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் காண்பீர்கள். விரும்பிய இட,பதவி மாற்றம் கிடைக்கும். உடல், மனநிலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.
ஆகஸ்ட்: சுக்கிர பலத்தால் புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடம் உதவியும், உதவி பெறுவதுமான காலகட்டம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். எதிர்காலம் கருதி சேமிக்கவும் இடமுண்டு.
செப்டம்பர்: குரு பலத்தால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். புனித தலங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்று மகிழ்வீர்கள். விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்றவற்றால் ஆதாயம் உயரும். வாகனப் பயணம் இனிமை சேர்க்கும்.
அக்டோபர்: சூரியபலத்தால் அரசாங்க விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் வருமானம் கூடும். தெய்வவழிபாட்டால் மனதில் அமைதி குடிகொண்டிருக்கும். புதிதாக ஆடை, ஆரபணங்கள் வாங்கும் யோகமுண்டு.
நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் எதிர்பாராத செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாவர். பணிச்சுமையால் அவதிப்படுவர். வெளியூர்ப் பயணத்தின் போது விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
டிசம்பர்: மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். அரசியல்வாதிகள் பதவியைத் தக்கவைக்க போராட வேண்டிவரும். உடல்நிலையில் அவ்வப்போது தொந்தரவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.