பழநி முருகன் கோயிலில் நவ.,27ல் சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. நேற்று (டிச.2.,) மாலை 5:30 மணிக்கு சாயரட்சைபூஜையில் புனிதநீர் நிரப்பிய கலசபூஜை நடந்து பரணி தீபம், மூலவர் சன்னதியில் ஏற்றப்பட்டது. சண்முகார்ச்சனை நடைபெற்று மஹா தீபாராதனை நடந்தது. இன்று (டிச.,3.,) திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும். மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். மதியம் 2:00 மணிக்கு குடமுழுக்கு அரங்க நுழைவாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்பின் மாலை 6:00 மணிக்கு சூழ்நிலைக்கேற்ப திறக்கப்பட்டு பக்தர்கள் கோயில் செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மேலும் 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். யாகசாலை தீபாராதனை நடைபெறும். கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெறும். அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். இன்று பழநி முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. நாளை வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.