அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 12:12
தென்காசி; கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா (ஐயப்பன்) திருக்கோவிலில், மண்டல பூஜையையொட்டி மகோத்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின. திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெறுகிறது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும். எட்டாம் திருநாளில் பள்ளிவேட்டை நடைபெற உள்ளது. ஒன்பதாம் திருநாளான டிசம்பர் 25 அன்று, கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெறுகிறது. பத்தாம் நாளான முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும். தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மதியம் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களான டிசம்பர் 27 வரை தினமும் சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை கவர்ந்து வருகின்றன.