செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையும், ஹோமமும் நடந்தது. 5 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலை சுற்றுப்பாதையில் திருப்பணி நடப்பதால், ரங்கநாதர் மலைஅடிவாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி வெங்கட்ரமணர் கோவில்: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9.30 மணிக்கு மகா தீபாராதனையும், பகல் 11.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. தொடர்ந்து சாமி கோவில் உலாவும், 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. பீரங்கிமேடு பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.