நரசிம்மனை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை: ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 06:01
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத உற்சவத்தில் இன்று 23ம் பாசுரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்;
திருப்பாவையின் 23ம் பாசுரம் பகவத் கிருபையையும், யாதவ சிம்மமான கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தையும் போற்றிப் புகழ்வதாகும். இந்த பாசுரத்தில் மாயக் கண்ணன் துயிலெழுந்து வரும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் விழித்தெழுந்து வருவதுடன் ஒப்பிட்டு, ரசிக்கிறாள் ஆண்டாள். ராமாவதாரம் நிகழ்ந்து 39 ஆண்டுகள் கழித்துத்தான் ராவண வதம் நடந்தது. தேவர்கள் துன்பம் தீர்ந்தது. ராம பட்டாபிஷேகமும் அதற்குப் பிறகு தான் நடந்தது. ஆனால், நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த அக்கணமே ஹிரண்யகசிபு வதம் நிகழ்கிறது. நரசிம்மனை உள்ளம் உருக வேண்டினால், நினைத்த மாத்திரம் தோன்றி பலனளிப்பான் என்பதால், அரிமுகன் அச்சுதனை வரிக்கக் கனாக் கண்ட ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நரசிம்மனையே போற்றியுள்ளாள்.
அளந்திட்ட துாணை அவன் தட்ட ஆங்கே ஒரு சிங்க உருவில் நரசிம்மாய் வந்து இரணியனை அழித்து பக்தன் பிரஹ்லாதனைக் காத்தாயே. அப்படிப்பட்ட உன் அவதார தந்திரத்தை அடியேனும் அறிவேன். அது போன்ற தந்திரங்கள் எதுவும் செய்து நீ வர வேண்டாம் கண்ணா.. யாதவ சிம்மமாக, நீ வா... சிங்க நடை நடந்து அத்தாணி மண்டபத்துக்கு வந்து சேர். அங்கு சிங்காதனத்தில் அமர்ந்து எங்கள் காரியத்தை ஆராய்ந்து அலசி ஒரு முடிவெடுத்து எங்களுக்கு அருள வேண்டும் என, அன்புக் கட்டளையிடுகின்றாள் ஆண்டாள். ஏன் சிங்காதனம் என்று சொன்னாள் என கேள்வி எழுலாம். ரணியன் வதம் முடிந்தவுடன், எம்பெருமானை நினையாத கொடியவன் அமர்ந்த சிம்மாதனத்தில் நான் உடனே அமர மாட்டேன். எம்பெருமானே, நீ அமர்ந்து அந்த சிம்மாதனத்தைப் புனிதமாக்கிக் கொடு என்று பிரகலாதன் பிரார்த்திக்க, அந்த சிம்மானத்தில் சீரிய சிங்கமான நரசிம்மன் அமர்ந்து அனுக்ரஹித்ததால், சிம்மாதானம் சிங்காதனம் என்று ஆகியது. எல்லாமும் நரசிம்மனே... இவ்வுலகத்திலும் நரசிம்மனே.. மேலுலகத்திலும் நரசிம்மனே.. எங்கெங்கு செல்கிறோமோ அங்கெல்லாம் நரசிம்மனே. நரசிம்மனை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால், நரசிம்மனே.. உம்மைச் சரணடைகிறேன் என்று, அவன் பாதம் பணிவோம்’ என்றார்.