பாரதப்புழா கும்பமேளாவில் இன்று ஸ்ரீசக்ர நவாவரண பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2026 12:02
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக கும்பமேளா, பாரதப்புழா நதிக்கரையில், பிப். 3 வரை நடக்கிறது. இதையொட்டி, மாலையில் நிளா ஆரத்தி நடக்கிறது.
நேற்று, தட்சிணாமூர்த்தி பூஜை நடந்தது. பவுர்ணமி, தைப்பூசம் என, சிறப்பு மிக்க இன்று, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு சூர்யகாலடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமையில் மகாகணபதி ஹோமம் நடக்கிறது.
தொடர்ந்து, தேவிபாகவத பாராயணம், லலிதா சகஸ்ரநாம யக்ஞம், தேவி நாம ஜபம், 11:30 மணிக்கு பேராசிரியர் ஹரீஷ் சந்திரசேகரன் தலைமையில் காவடியாட்டம், மாலை 4:00க்கு சந்தீப் நெடும்பால் தலைமையில் ஸ்ரீமஹா ஸ்ரீசக்ர நவாவரண பூஜை நடக்கிறது.
அதை தொடர்ந்து, பாரத பண்பாட்டின் அடிப்படை வேதங்கள், அதன் லட்சியம் இறைவனை உணர்தல் என, ஆச்சாரியர் முல்லபள்ளி கிருஷ்ணன் நம்பூதிரிப்பாடு விளக்குகிறார்.
கும்பமேளா அமைப்பினர் கூறியதாவது:
இறைவனின் கதைகள் மற்றும் ஸ்தோத்திரங்களைக் கேட்டல், பாடுதல், நினைத்தல், பூஜை, வணக்கம், ஆத்ம சமர்ப்பணம் என பக்தி யோகத்தின் ஒன்பது வழிகளையும் ஒருங்கிணைத்து, வேண்டிய வரங்களைப் பெறவும், ஐஸ்வர்யம் பெருகவும், தேசப் பாதுகாப்பு மற்றும் உலக நலனுக்காகவும் நடத்தப்படும் தாந்திரீக வழிபாடே ஸ்ரீமஹா ஸ்ரீசக்ர நவாவரண பூஜை.
இந்தப் பூஜையில், சங்கீத அர்ச்சனை, நடன சமர்ப்பணம், வேத சூக்த அர்ச்சனை இடம்பெறும். சங்கீத அர்ச்சனையின் போது, முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீசக்ர நவாவரண கீர்த்தனைகளை, இசை வித்வான் பிரம்மஸ்ரீ காசர்கோடு யோகீச சர்மா பாடுகிறார்.