பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில், வேல் வழிபாடு நேற்று நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து சங்க ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமையில், பெண்கள், வேலை கையில் ஏந்தியபடி முருகப்பெருமான் புகழ் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். கரிவரதராஜப்பெருமாள் கோவில், சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வழிபட்ட பின், அங்கு இருந்து ஊர்வலமாக பல்லடம் ரோடு வழியாக கே.கே.ஜி. திருமண மண்டபத்துக்கு சென்றனர். மதியம், 12:00 மணிக்கு வேல் வழிபாடு நடந்தது. பெண்கள் வேலுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். சங்க நிறுவனர் கூறுகையில், ‘பொதுமக்களை உள்ளடக்கி பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் சார்பில், 1,700 பெண்கள் ஒரே சீருடை அணிந்து வேல் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். விவசாயம், தொழில், குழந்தைகள் ஒழுக்கம், கட்டுப்பாடுடன் வாழ வேண்டும். பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அரசியல், ஜாதி கடந்து மக்கள் குழுக்களாக செயல்பட வேண்டும். அதற்காக வேல் வழிபாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.