காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், கூரத்தாழ்வானின் திருவவதார மகோத்சவம் 13 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி, நடப்பாண்டு, 1,015வது திருவவதார மகோத்சவம் கடந்த 28ம் தேதி காலை 7:15 மணிக்கு திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உத்சவத்துடன் துவங்கியது. தினமும் காலையில் கூரத்தாழ்வான் திருப்பல்லக்கிலும், மாலையில் யாளி, மங்களகிரி, கமலாசனதொட்டி, சூரிய பிரபை, குதிரை வாகனம், சந்திர பிரபை யானை உள்ளிட்ட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாள் பிரபல உத்சவமான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், இன்று காலை 7:45 பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் வீதி வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர். விழாவில் கூரம், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், பெங்களூரூ உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, திருப்பல்லக்கு, மூலவர் திருமஞ்சனமும், மாலை தோளுக்கினியான் சாற்றுமறை உத்சவம் நடக்கிறது.