சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 12:02
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு ஆறுபடை வீடுகளுக்கு இணையாக செல்வ முத்துக்குமார சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இதனால் சிவ மூத்தமும், சக்தி மூத்தமும், முருக மூர்த்தமும் ஒருசேர அமைந்த தலமாக திகழ்கிறது. செவ்வாய் அதிதேவதையான முருகப்பெருமானை இத்தலத்தில் தை மாத செவ்வாயில் வழிபடுவோர் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டு இம்மை மறுமை இன்பம் எய்துவர். இதனால் இத்தலத்தில் தை செவ்வாய் உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தை செவ்வாய் உற்சவத்தில் 9ம் நாள் விழாவான இன்று திருதேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் செல்வ முத்துக்குமார சுவாமி திருத்தேரில் எழுந்தருள தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு மாட வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. வழி முழுவதும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும், ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ரமணி தலைமையிலானோர் செய்திருந்தனர்.