பாலகணபதி, அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 01:02
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நடந்த பால கணபதி மற்றும் அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட பொன்முடியில், புதிதாக பால கணபதி, பொன் மாகாளியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் ஆகிய கோயில்கள் கட்டப்பட்டன. இதன் கும்பாபிஷேகம் கடந்த, 7ம் தேதி துவங்கியது. மாலை பால கணபதி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர். இரவு முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, 108 ஹோம திரவிய சமர்ப்பணம், நாடி சந்தானம் பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த கலசங்கள் கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வரப்பட் டது. இதில் கோபுர கலசத்திற்கும் அதை அடுத்து பால கணபதி, பொன் காளியம்மன், பத்ரகாளியம்மன் ஆகிய சுவாமிகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். இதில் மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.