மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 02:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா இம்மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 16ம் தேதி மயானகொள்ளையும், 19ம் தேதி தீமிதி விழாவும், 21ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டு புதிய தேர் கட்டும் பணி கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. நிலையாக செய்து வைத்துள்ள தேர் சக்கரம், பீடம், கலசம் தவிர்த்து மீதம் உள்ள பாகங்களை பனை, காட்டுவா உள்ளிட்ட பச்சை மரங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர். பாரம்பரியமாக இக்கோவிலுக்கு தேர் வடிவமைக்கும் தச்சு தொழிலாளர்கள் இப்பணியை செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.