நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 03:02
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது நத்தம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப்பெருந்திருவிழா வருகிற பிப்.23 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் 24 உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலை வந்து சேருவர்.
பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவர். தொடர்ந்து இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். பிப்.27 மயில் வாகனத்திலும், மார்ச்.3 சிம்ம வாகனத்திலும், மார்ச்.6 அன்ன வாகனத்திலும் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச்.8 பக்தர்கள் பால்குடமும்,மார்ச்.9 அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்.10 அதிகாலையில் மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும்,அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.மார்ச்.11 மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை பூசாரிகள் செய்து வருகின்றனர்.