காளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மோற்சம்; பஞ்சமூர்த்திகள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 01:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதன்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளி அம்பாரிகளில் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரும், சப்பரங்களில் (பஞ்சமூர்த்திகள் ) விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வரிசையாக நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாள் வாகன சேவை என்பதால் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன் கோயிலில் இருந்து ராஜ் கோபுரம் வரை கொண்டு சென்று அங்கு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. வாகன ஊர்வலத்தில் (மகரம்) அலங்கரிக்கப்பட்ட எருது, அலங்கார குடைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் என சாமி ஊர்வலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.