பதிவு செய்த நாள்
13
பிப்
2026
10:02
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் 1,400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 48 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 22ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதையொட்டி, கடந்த 5 ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. கோவில் தல வரலாறு நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான், இழந்த தவ வலிமையை திரும்ப பெற்றுத் தந்த திருத்தலமாக விளங்கும் இத்தலம், ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்திற்கு தோஷம் இருப்பவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் போற்றப்படுகிறது. விக்கிரமசோழன் இறந்த பிறகு, அவரது மகன் இரண்டாம் குலோத்துங்கனுக்கு சோழ சக்கரவர்த்தியாக கி.பி., 1133ம் ஆண்டு முடி சூட்டப்பட்டு, கி.பி., 1150ம் ஆண்டு வரை மன்னராக பதவி வகித்தார். இவர் மிகச் சிறந்த சிவ பக்தர்.
சிதம்பரம் நடராஜ பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில்தான் மரக்காணம் முன்னுார் ஆடவல்லீஸ்வர் கோவிலும் கற்றளியாக புனரமைக்கப்பட்டுள்ளது. தம்மால் கற்றளியாக் புனரமைக் கப்பட்ட முன்னுார் திருத்தல ஈசனுக்கும் ஆடவல்ல நாயனார் என்றே பெயர் சூட்டியிருப்பதை இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எங்கும் காணாதஅரிய தரிசனம் முன்னுார் ஈசனுக்கு இம்மன்னரது கல்வெட்டுகளில் ‘திருமூலத்தான முடைய மகாதேவா்’ என்ற பெயர் உள்ளதையும் அறிய முடிகிறது. வேத, இதிகாச, புராண காலத்திலிருந்தே விளங்குவதாக காணப்படும் இத்கோவிலின் ஆடவல்லீஸ்வரர் வேறு எங்கும் எளிதில் காணமுடியாத தென் திசை நோக்கி எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும். சிதம்பரத்திற்கு நிகராக முன்னுார் ஆடவல்லீஸ்வர் மீது அளவற்ற பற்று கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் ஈசன் ஆடிய திருநடனத்தை முன்னுாரிலும் காண வேண்டுமென விரும்பியதாகவும், மன்னரது விருப்பத்தை ஏற்று முன்னுாற்று மங்கலம் என்ற இத்தலத்தில் ஈசன் அம்பிகையுடன் ஆனந்த தாண்டவமாடி மன்னனுக்கு காட்சியளித்ததாவும் தலவரலாறு தெரிவிக்கிறது.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளில், இவ்வறம் காத்தார் திருப்பாதம் என் தலை மேலன் என, பொறித்து வைத்துள்ள இரண்டாம் குலோத்துங்கன். அதாவது இம்மன்னன் திருப்பணி செய்த முன்னுார் தலத்தில் இவர் அளித்த கொடைகளையும் விழாக்கள் நடத்த அளித்த மானியங்களையும் சூரிய சந்திரர் உள்ள வரை காப்பாற்றி வருகின்ற அன்பர்களின் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதாக கல்வெட்டில் பொறித்துள்ளார் மன்னர். ரூ.7 கோடிக்கு மேல் நிதி இரண்டாம் குலோத்துங்கசோழன் திருப்பணி செய்த முன்னுார் தலத்தில் தற்போது பெரிய அளவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4.45 கோடி ரூபாயில் தெற்கு ராஜகோபுரம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து, முன்னுார் மற்றும் சில கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து 7 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி பெற்று மூன்று ராஜ கோபுரங்களை கட்டி முடித்துள்ளனர்.
கிழக்கு கோபுர திருப்பணி, மேற்கு கோபுர திருப்பணி, ராஜ கோபுர திருப்பணி என பல பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி துவங்கப்பட்ட ராஜ கோபுரம் 14 அடி ஆழம் 52 அடி நீளம் 38 அடி அகலம் கொண்ட பணி முடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலை, ஆலங்குப்பத்தில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது முன்னுார் பிரஹன்நாயகி உடனுறை ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில்.