மகா சிவராத்திரி விழாவை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று முன் தினம் மாலை முதல் நான்கு ஜாம அபிஷேக அலங்கார பூஜைகள் துவங்கி நேற்று காலை வரை நடந்தன. சூலூர் சிவன் கோவில், இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவில், கணபதீஸ்வரர் கோவில், அரசூர் பரமசிவன் கோவில், வேம்படி ஈஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் மற்றும் பள்ளபாளையம் சிவன் கோவிலில் மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஓம் நம சிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, பக்தர்கள் பரம் பொருளை வழிபட்டனர். அரசூர் பரமசிவன் கோவிலில் சிவராத்திரி பூஜை பயபக்தியுடன் நடந்தது. விவசாயம் செழிக்க, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு, காளை மாடு மற்றும் காவடி, வேல் ஏந்தி சுவாமி புறப்பாடு நடப்பது வழக்கம். கோவில்கள் மற்றும் பக்கதர்களின் வீடுகளில் படி பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பரமசிவன் கோவிலில் பள்ளைய பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.