அன்னூர் அருகே முதலிபாளையத்தில் ராமானந்த மடாலயத்தை நிறுவியவர் சிவராமசாமி அடிகளார். சிவராமசாமியின் 60வது குருபூஜை விழா முதலிபாளையத்தில் ராமானந்த மடாலயத்தில் நடந்தது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், "திருவாசகம், திருக்குறள் உள்ளிட்டவைகளை தினமும் படிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்," என்றார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், "பேரூர் மடம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியவை ஆன்மிகத்தை வளர்ப்பது, நம் கலாச்சாரத்தை பேணி காப்பது, ஆன்மீகத்தை கிராமப்புறம் வரை கொண்டு செல்வது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. மடாலயங்களின் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்," என்றார். காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி, பாரதி மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பிவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ரூட் நிறுவனங்களின் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார். பேரூராதீனமும், திருப்பணியும் என்னும் தலைப்பில் வசந்தி, பெரியபுராணம் என்னும் பெரும் பேறு. என்னும் தலைப்பில் சிந்தனா ஆகியோர் பேசினர். விழாவில் தென் சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள், சின்னத் தொட்டிபாளையம் அருணை அருள் முருகன் அடிகள், பணி நிறைவு தமிழாசிரியர் ராசப்பன் மற்றும் இராமானந்த மடாலய அன்பர்கள் பங்கேற்றனர்.