கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.
கந்தபுராண ஞான விழா, கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமி குருபூஜை, கந்தபுராணத்தில் தவம் புத்தக வெளியீடு என முப்பெரும் விழா சண்முகா மகாலில் நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் தமிழழகன் வரவேற்றார். கந்த புராண பாராயணத்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் புவனேஸ்வரி ராஜேஷ்வரனின் இசைக்கச்சேரி நடந்தது.
கந்தபுராண ஞானசபை நிறுவனர் தில்லை கார்த்திகேய சிவாச்சாரியார் எழுதிய, கந்தபுராணத்தில் தவம் எனும் புத்தகத்தை, திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சார்ய சுவாமி வெளியிட்டார்.
பத்திர பதிவுத்துறை ராஜேந்திரன், வழக்கறிஞர் கோகுலதாஸ் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டனர். கந்த புராணம் பற்றிய பாடல், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து விருத்தாசலம் நல்லுார் சாம்பசிவ குருக்களின் கந்தபுராண ஞான சொற்பொழிவு நடந்தது. வேலாயுத பெருமான் வழிபாடு, குருபூஜை, கூட்டுப்பிரார்த்தனை, மகா தீபாராதனைக்குப்பின் பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகேய சிவாச்சார்யார் நன்றி கூறினார்.