திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் மோடி மனமுருகி முருகனை வழிபட்டார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2026 04:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மண்டேலா நகரில் இன்று நடக்கும் தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களின் பிரசார கூட்டத்திலும், மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அரசு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்ப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி மனமுருகி முருகனை வழிபட்டார். பிரதமருக்கு கோவிலில் சிறப்பு மரியாதை மற்றும் முருகன் படம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்காக சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்ய வலியுறுத்தினர். கோயிலில் பல்வேறு இடங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டது. கோயில் சார்பில் அனைத்து மண்டபங்களிலும் வாட்டர் வாஷ் உள்பட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து மண்டபங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் கோயிலில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலுக்குள் உள்ள அனைத்து இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளது. உயரமான படிக்கட்டுகளில் பலகைகளால் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர்கள் திருமேனிகளின் பின்புற முள்ள மலைப்பாறையில் பச்சைக் கற்பூரம், மஞ்சள், வசம்பு கலவை சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது. கோயில் தூண்களில் உள்ள சுவாமி கற் சிலைகளில் எண்ணெய்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது. கோயில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினமும், நேற்றும் கோயிலுக்குள் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தது. கலெக்டர் பிரவீன் குமார் போலீஸ் கமிஷனர் லோகநாதன் மாநகராட்சி கமிஷன் சித்ரா ஆகியோர் நேற்று காலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.வாகன ஒத்திகை: மதுரை விமான நிலையத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் வரையிலும், கோயிலில் இருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடம், அங்கிருந்து விமான நிலையம் வரை வாகன ஒத்திகை நடந்தது. ஒத்திகையில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றன.
நடைதிறப்பு நேரம் மாற்றம்: பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று மதியம் 12:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, பிரதமர் சுவாமி தரிசனம்முடித்து சென்ற பின்பு மாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.