காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 14ம் தேதி காலை கருடசேவை உத்சவம் நடந்தது. மாலை ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள், டி.கே.நம்பி தெரு, சி.வி.ராஜகோபால் தெரு, வரதர் கோவில் மாட வீதி என, முக்கிய வீதிகள் வழியாக தேரில் பவனி வந்தார். நாளை காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. வரும் 22ம் தேதி புஷ்ப பல்லக்குடன் பங்குனி பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.