அழகர்கோவிலில் திருக்கல்யாண உற்ஸவம் மார்ச் 29ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 12:03
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இந்தாண்டுக்கான திருக்கல்யாண உற்ஸவம் மார்ச் 29 முதல் ஏப்.2 வரை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்.1 பங்குனி உத்திரத்தன்று காலை 7:15 மணிக்கு மேல் 7:29 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், தேவியருடன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாட்டு, தோளுக்கினியானில் அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தர வல்லித் தாயார், ஆண்டாள் ஆகிய 4 தேவியருக்கும் காலை 9:02 மணிக்கு மேல் 9:18 மணிக்குள் பெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாணம் நடக்கிறது. மேற்கண்ட ஆறு மூர்த்திகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் காணும் அரிய நிகழ்வு அன்று மட்டுமே காணக்கிடைப்பது சிறப்பம்சம். திருமணத் தடை நீங்க, குடும்ப ஒற்றுமை பெருக இவ்வைபவத்தை காண வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.