மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்திட பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 05:03
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மலை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்திட பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட தாகம் தீர்க்க கிடைப்பது மிகவும் சிரமமாகியுள்ளது. அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆற்றுப் பகுதியில் தண்ணீர் வற்றியுள்ளதால் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் வந்துவிடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் செய்தால் மலை வரும் என்பது ஐதீகம். அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, கடந்த காலங்களில் உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ததால் நல்ல மழை பெய்தது. அந்த வகையில் தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து,மக்களின் அன்றாட தேவையான குடி தண்ணீர் தடையின்றி கிடைக்க உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.