ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் குடம் குடமாக 2,000 லிட்டர் பாலாபிஷேகம்
பதிவு செய்த நாள்
27
மார் 2026 11:03
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி என அழைக்கப்படும், பஞ்சவடீ திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி ஸ்ரீவேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், நாளை ராமநவமி உத்சவத்தையொட்டி, பஞ்சவடீ திருத்தலத்தில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெற்றது. தொடர்ந்து காலை, லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு, இன்று அதிகாலை 4:00 மணிக்கு, ராமர் சன்னிதியில், விஸ்வ ரூப தரிசனம், கோ பூஜை நடைபெற்றது. அதன்பின், காலை 5:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், காலை 6:00 மணிக்கு மேல், யாக சாலையில் ஏழாம் கால பூஜை , காலை 8:30 மணிக்கு, சீதா சமேத ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலாபிஷேகம், வாசனை திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். காலை 10:00 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
|