தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்கியது. வெள்ளி ரிஷப வாகன திருவீதியுலா, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தெப்பத்தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், வெகு விமர்சையாக நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான நேற்று, பங்குனி உத்திரத்தையொட்டி, அதிகாலை, 3:30 மணிக்கு, யாகசாலை பூஜை, மூலவர் கால சந்தி அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:30 மணிக்கு, கனகசபை மண்டபத்தில், நடராஜர் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, அரிசிமாவு, சந்தனம், குங்குமம், திருநீறு, இளநீர், தேன் உள்ளிட்டவைகள் கொண்டு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 9:40 மணிக்கு, பங்குனி உத்திர தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள், ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைந்தது.