ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம்: திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 10:04
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் அதிகாலை வேத வியாச பட்டர், திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது.
வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவத்தில் நேற்று அங்குரார்ப்பத்தம் நடைபெற்றது. விபீஷணாழ்வார் ஸ்ரீரங்க விமானத்தை அயோத்தியிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில் சந்திரபுஷ்கரணி கரையில் இறக்கி வைத்தார். உறையூரில் அப்பொழுது அரசனாயிருந்த தர்மவர்மா மறுநாள் பிரம்மா ஏற்படுத்திய உத்ஸவம் நடத்த வேண்டிய தினமாக இருந்ததால், தர்மவர்மா கோரிக்கையை ஏற்று விபீஷணாழ்வார் இந்த பிரம்மோத்ஸவத்தை நடத்த அனுமதித்தார் என ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும், லக்ஷ்மி காவியத்திலும் காணப்படுகிறது. இங்கு பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் மார்24ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பதினொன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பத்தாம் திருநாள் அதிகாலை வேத வியாச பட்டர், திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது. நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.