கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 04:04
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் மார்ச் 26 அன்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டினர். பக்தர்களும் கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழாவை முன்னிட்டு 8 நாட்களாக அம்மன் கேடகம், சிம்மம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். பங்குனி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வெட்டுடையார் காளி எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று காலை 9:40 மணிக்கு தேர் தடத்தில் சிதறு தேங்காய் உடைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. தேருக்கு முன்பாக சப்பரத்தில் விநாயகர் உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் முழங்க தேர் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து காலை 10:05 மணிக்கு நிலையை அடைந்தது. தாசில்தார் லெனின், கோயில் நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தேரோட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.