பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு குடம் குடமாக பாலபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 05:04
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய நிலையில் குடம் குடமாக பாலபிஷேகம் செய்யப்பட்டது.
இங்கு பங்குனி திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கி, முக்கிய விழாவாக மின் தீப தேரில் உத்திரத்தன்று அம்மன் உலா வந்தார். நேற்று கொடி இறக்கப்பட்டது. இன்று காலை 4:00 மணி தொடங்கி வைகை ஆற்றில் இருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். மேலும் இளநீர் காவடி எடுத்தும், வேல் குத்தியும் சக்தி கோஷம் முழங்க பரவசத்துடன் சென்றனர். குழந்தைகள் தொடங்கி ஆண் மற்றும் பெண் பக்தர்கள் என அம்மன் அருள் வந்து ஆடி சென்றனர். 10:30 மணி வரை பால்குடங்கள் கோயிலை அடைந்த நிலையில், அம்மனுக்கு அனைத்து வகையான அபிஷேகம் நடந்தது. மேலும் பக்தர்கள் சுமந்து சென்ற பால் குடம் குடமாக மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் பூ பல்லக்கில் திருவீதி உலா வந்தார். பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விழா நாட்களில் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் ஏற்பாடுகளை செய்தனர்.