தாயமங்கலத்தில் திருவிழா முடிவடைந்தும் குவியும் பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2026 10:04
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்ற நிலையிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மன் அலங்காரங்களுடன் சிம்மம்,குதிரை,காமதேனு,அன்னம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா கடந்த 5ம் தேதி நடைபெற்றது.6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்றனர். கடந்த 8ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் மானாமதுரை வழியாக தாயமங்கலத்திற்கு சென்றனர். இதனால் மானாமதுரை பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாயமங்கலம் கோயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.