காஞ்சிபுரம் சோமேஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2026 10:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
காஞ்சி நால்வர் நற்பணி குழு சார்பில், 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவாலயங்களுக்கு சென்று உழவாரப்பணி செய்வது வழக்கம். அதன்படி, அரப்பனஞ்சேரி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் ‘நால்வர் நற்பணி’ குழுவினர் நேற்று காலை உழவாரப்பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றினர். புதர்மண்டி கிடந்த இடத்தில், மண்ணில் புதைந்தபடி முருகன் சிலை, அம்மன் சிலை மற்றும் உடைந்த நிலையில் ஒரு விஷ்ணு துர்க்கை சிலை உட்பட மொத்தம், 3 சிலைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சிலைகளை சுத்தப்படுத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் செய்து வழிபட்டனர். தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய் துறையினர் சிலைகளை மீட்டனர்.