மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 04:04
ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையில் வைகை அணை நீர்மட்டம் 70 அடி வரை உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக குறைந்துள்ளது. குறைவான நீர் இருப்பால் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அளவு நீரை ஆற்றின் வழியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 1ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவில் நீர் தேவை கட்டாயம் என்பதால் நீர் இருப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து குறைந்த அளவு நீரை கால்வாய் வழியாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.
வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 29 வரை வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட உள்ளது. ஆறு நாட்களில் 170 மில்லியன் கன அடி நீர் வெளியேறும். குறைந்த அளவு நீர் ஆற்றின் வழியாக சென்றால் குறிப்பிட்ட நாளில் மதுரை சென்று சேராது. எனவே அணையில் திறக்கப்படும் நீரை கால்வாய் வழியாக கொண்டு சென்று செல்லூர் கண்மாயில் தேக்கி திருவிழாவிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.